Sunday 27 April 2014

Brief Spacialities Temples

porpanai kottai bairavar
புதுகோட்டைக்கு அருகில் உள்ள பொற்பனைக் கோட்டை என்ற ஊரில் உள்ள ' பைரவர் கோவிலில் பைரவரின் உருவம் பத்து அடிக்கு மேல் உயரமுள்ளது. பைரவருக்கு ஏணி மீது ஏறியே தினமும் அபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இவருக்கு வெள்ளிக் கிழமை சந்தனக் காப்பும், வடை மாலையும் சாத்துகின்றனர். 


சிவன் கையில் சக்கரம்!

பெருமாளுக்குரிய சக்கரத்தை சிவனும் வைத்திருக்கிறார்! இதைக் காண வேண்டுமானால் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவிற்குடி  மயானேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். சிவன் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அஷ்ட வீரட்டத் தலங்களில் இது ஒன்று. இங்கு சலந்தராசுரனை சக்கர ஆயுதத்தால் சிவன் அழித்தார். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனின் திருநாமம் திருமயானேஸ்வரர். அம்மன், பரிமள நாயகி. உற்சவரின் திருக்கரங்களில் சக்கரம் உள்ளது. இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, மயில் மீது தேவியருடன் அமர்ந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஒரே ஆலயத்தில் பஞ்சபூதங்கள்

பஞ்ச பூதத் தலங்களின் சங்கமமாக ஐந்து சிவ சந்நதிகள் கொண்ட அபூர்வ ஆலயம் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 'கொண் டாபுரம்' கிராமத்திலுள்ளது. பஞ்ச பூத நாயகனாக, சர்வேஸ்வரனாக வழிபடப்படும் இறைவன், 'பஞ்சலிங்கேஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். 

பாறாங்கல் கோயில் 

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் முழுவதும் பாறாங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள லிங்கத்தின் பீடம் மட்டும் 40 அடி நீளம். ஆவுடையாருக்கும், லிங்கத்திற்கும் உடுத்த வேண்டிய வேட்டி, துண்டை தனித்தனியாக நெய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத பவுர்ணமி நாள், மதிய வேளையில், இறைவனுக்கு மாபெரும் அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. இப்படிச் செய்தால் மக்கள் அவ்வருடம் முழுவதும் பசியால் வாடாமல் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. அபிஷேகம் செய்த அன்னத்தை தயிர் சாதமாகக் கலந்து பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்குகிறார்கள்.

குழந்தை வரம் தரும் க்ஷேத்திர பாலகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சக்கரத்தாழ்வார் சந்நதி முன்பு ஒரு பெரிய கல் நடப்பட்டுள்ளது. இதை 'க்ஷேத்திர பாலகர்' என்கிறார்கள்; தங்கள் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள். இவரை வணங்கினால் மகப்பேறு வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விதவிதமாகக் கொண்டைகள் 

விருத்தாசலத்திற்கு அருகே ஸ்ரீமுஷ்ணம், பூவராக சுவாமி திருக்கோயிலிலுள்ள 16 கால் மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் நாட்டியப் பெண்ணின் சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியே நாயக்கர் கொண்டை, ஆண்டாள் கொண்டை என பலவித கொண்டை அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்கள். 

Saturday 26 April 2014

NEEDUR SOMANATEESWARAR - REMOVING SKIN DESEASES

சுயம்பு மூர்த்தியாக, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக, இப்பூவுலகில் கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் விளங்கி வரு கிறார் சோமநாத சுவாமி. சகல சாபங்களையும் போக்கும் கோயில் இது என்கின்றார் பதஞ்சலியார். சூரியநாராயணனே இங்கு தங்கி, அப்பனாம்  சோமநாதப் பெருமானையும், அம்மையாம் வேயுறு தோளியம் பாளையும் தொழுதேத்திய புகழ்மிக்க தலமிது. பெரும் பதவிக்காரனாகிய தேவேந்திரனே உருவாக்கி, தொழுதேத்திய திவ்ய மூர்த்தியாம் இந்த சோமநாத மூர்த்தி. சகல பிறவிகளிலும் ஏந்திய  சாபங்களை, தோஷங்களை நீக்க வல்லவர். எந்த ஒரு இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அடிப்படையான காரணம் உண்டு. துக்கங்களைக் களையும்,  சங்கடங்களை நாசஞ் செய்யும் கருவூலமே இச்சோமநாதப் பெருமான். இதனை பதஞ்சலியார்,

‘‘வினைப்பயனை யறுத்தே பேரின்ப
முடன் ஆனந்த வாழ்வையீவான்
அருணமைந்தேத்திய யண்ணல் சடையன்
திருநீடூரமர் சோமகந்தன் - வேயுறு
தோளியம்பிகை தமை காரணாகம விதி
வழி போற்றி தஞ்சாப மறுபட்ட அருணனே
வேங்கை கதிர் பாய நின்றே’’

எனப் போற்றுகின்றார். ஆம். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதமான சூரியன் ஆதிக்கங் கொண்ட இத்திங்களில், சுவாமி மீது சூரிய ஒளி விழுகி ன்றது. நவகிரகங்கள் இல்லாத கோயில் இது. ஆனால், நவகிரகங்கள் ஒன்றிணைந்து, ஒரே தீர்த்தமாக, ‘ஒன்பது தீர்த்தம்’ என்றே போற்றப்படும்  புஷ்கரணி இங்குண்டு. நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்களையும் விலக்கும் திறன் கொண்ட புஷ்கரணி. சிவயோகர் தமது நூலில்,

‘‘மந்தனும் பருதியும் இன்னபிற
கோளால் கூடும் தோசப்பீடை
கருக்க இம்மேதினியிலே நவ
தீர்த்தமதனிலே நீராடி யெழு’’

என்றார். பற்பல கோயில்களில் பற்பல பூசை புரிந்தும் பயனின்றி போனாலும் சோர வேண்டியதில்லை. இங்குள்ள ஒன்பது தீர்த்த மெனும்  புஷ்கரணியில் நீராடி, இறைவனைத் தொழ விலகும் கோளால் எழுந்த பீடையே என்று பொருள். எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு, பின் பெரியோர்களின் ஆலோசனைப்படியே  காரியங்களில் ஈடுபடவேண்டும் என்பது நியதி. அதன்படி, இப்புண்ணிய தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற மூன்று  நிலைகளில் நிற்கின்றார். 

இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்று அழைத்தனர் சித்தர் முது மக்கள். படைக்கும் தொழில் புரியும் பிரம்மதேவர் உள்ளிட்ட மூர்த்தியரும் இம்மூன்று அம்சங்களையும் தியானித்தே தம் பணியில் கவனம் செலுத்து கின்றனர். எனவே, நாமும் இதனைப் பின்பற்றி செயல்பட்டால், குறைநீங்கி இன்பம் பெற ஏதுவாகும். இதனையே சிவஞானயோகியார்,

‘‘மும்மூர்த்தியர் தமக்கிணையான
சிந்தாமணிச் செல்வ மகாசிவானந்த
கணநாதரைத் தொழுதே எக்கருமமுந்
தோற்ற ஜெயமுண்டு பயமில்லை
யறிவீர் உலகத்தோரே’’
என்றார். 

காலை நேரத்தில் சிவபூசை புரிவது அவசியம். தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவலிங்கம் ஏதும் தென்படாது போக, காவிரி ஆற்றின் மணலில்  ஒரு சிவலிங்கம் செய்து, ஒரு பாடலைப் பாடி, சிவபெருமானின் நடன தரிசனம் வேண்டி பிரார்த்தித்தான். அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர  பகவானுக்கு நடன காட்சி தந்தமையால், ‘கான நர்த்தன சங்கரா’ எனக் கைகூப்பி இந்திரன் ஈசனை வழிபட்டான். அன்று தொட்டு இந்த  சோமநாதப்பெருமானுக்கு ‘‘கான நர்த்தன சங்கரன்’’ என்ற பெயர் உண்டாயிற்று. இந்த திவ்யமூர்த்தியை ஆவணிமாதம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில்  விரதமிருந்து தொழுபவர்க்கு, உடம்பில் உள்ள மச்சம் மறையும்; மாறாத வடு மாறும். தோலில் ஏற்பட்ட வெள்ளைப் புள்ளிகள், கருப்பு புள்ளிகள்  யாவுமே மறைந்தோடி வனப்பு பெறுவர். 
இதனை பாம்பாட்டிச் சித்தர்,

‘‘நஞ்சால் நேர்ந்த சரும ரோக
நிவாரணஞ் செய்குவன் - நர்த்தனச்
சங்கரனார் குட்டமெனும் ரோகந்தனையு
நீக்குமருத்துவ னென்று போற்றுவீரே’’

என்றே பேசுகிறார். பாம்பைப் போல, தனது ஆத்ம சக்தியை ஆட்டி பாம்பாட்டி என்ற பெயர் பெற்ற சித்தர் அருள் பெற்றது இத்திருத் தலத்தில் தான். மணலினாலான இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை இன்றும் காண, வியப்பு மேலிடுகிறதன்றோ? உற்சவருக்கு  சோமாஸ்கந்தர் என்று பெயர். மனதிற்கு பிடித்த மணவாளன் அமையவும், அமைந்த கணவரின் உறவினர்கள் தன்னோடு இன்புற்று இருத்தலுமே ஒரு பெண்ணிற்கு இன்பம் தருவது.  இதனை சிறிதும் குறையின்றி செய்யும் அப்பன், இந்த சோமாஸ்கந்தர்.

‘‘சோமகந்தரைச் சரணஞ்செயும்
பாவையர் தம் மனத்து சிம்மாசனம்
செய வீற்றிருக்க வைப்பான் மணவாளந்
தனையே - அவர்தங் குலத்தோரும்
மாட்டுப் பெண்ணை அகமிக மகிழச்
செயவே மகிழமென வடிவு தாங்கி
மாங்கல்யதாரண தேவதை நிற்க மெய்மையோதினமே’’ 

- என்றார் தேவனார். சிவயோக சித்தரான இவர் திருமாங்கல்ய பலம் தரும் தேவதை, மாங்கல்ய தாரண தேவதையான இவளே இத்திருத்தலத்து வி ருட்சமான ‘மகிழ’ மரமாகவும் நிற்கின்றாள் என்கிறார். இந்த விருட்சத்தை தொழுதக்கால், பூரிப்பெய்தி மகிழ்வான இல்லறம் கிடைக்கும் என்கிறது சி த்தர் தம் வாக்கு. 
காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள சக்தி படைத்த கோயில் இது. சுயமாகத் தோன்றிய மூர்த்தி, இந்த சோமநாதசுவாமி. இவர் கொலு விருக்கும் விமானம் இருதளம் எனப்படும் கீர்த்தி மிகு விமானம் ஆகும். நடராஜப் பெருமான் சுதை வடிவில் அமைந்தமை மெத்த சிறப்புடைத்தது. 

தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் கொடுவினைப் பயனால் நண்டாகப் பிறந்து, நாரதமுனியிடம் சாபவிமோசனம் வேண்ட, அவரும் சோமநாதரைச்  சரணடைய பணித்தார். அவ்வழியில் சிவதரிசனம் பெற்ற தன்மசுதன், சிவனிடம் ஐக்கியமானான். நண்டு சென்று சிவபெருமானிடம் ஐக்கியமான துளை  இன்றும் சிவ லிங்கத்தில் காணப்படுகின்றது. இதனையே அகத்தியன்,

‘‘கடக வடிவு நின்ற தன்மசுதனை தன்னுள்
கூட்டிய சோமேசன் - தன்னை சரணடைய
நிற்போர் தம் ஊழறுபடுஞ் சொன்னோம்
காளிகாம்பாள் தொழுதேத்திய மூர்த்திதமை
கை தொழுவாருக்கு இலை யாதொருவைரியரே’’       

எனப் பேசுகின்றார். பத்ரகாளியம்பிகை இச்சிவனை தொழுதே கைலாயம் சென்றாள். அன்னை பத்ரகாளியை தொழுபவர்க்கு எதிரிகள் இல்லை; மந்திர 
தந்திர வித்தைகள் சித்தியாகும் என்கிறது ஒரு பழம் பாடல். தெரிந்து அல்லது தெரியாமல் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக விளங்குபவர் இந்த ஈசன். எந்த ஒரு நோயும், தொல்லையும், நாம் செய்யும்  பாவங்களினால்தான் வருகின்றது என்கிறது சித்தர் தம் வாக்கு. அத்தோஷங்கள் விலக, நோய், தொல்லை, கஷ்டம் யாவும் இந்த சோமநாதரைத்  தொழுதால்  விலகும். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது இந்த நீடூர் கோயில்.

SHIVA / ANNAPORANI NEAR KANDIYUR

அந்த திவ்ய பக்த தம்பதியர் திருமடத்தின் முன் நின்று பஞ்சாட்சரத்தை சொல்ல சோற்றுத்துறையே நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை தம் மனச்சிறைக்குள் முடிந்து வைத்த தம்பதியர், நோக்கிய இடமெல்லாம் நாதனின் திருவுருவே எனும் இணையிலா நிலையில் ஒருநிலையாக நின்றனர். நாளும் அடியார்களுக்கு அன்னமிடும் வேலையே தாம் வையம் புகுந்ததின் பேறு என்று இனியர்களாக விளங்கினர். விரித்த கைகளில் எதுவுமற்று, இருப்பதெல்லாம் ஈசனுக்கே என ஈந்து ஈந்து உய்வுற்றனர். ஈசன் இன்னும் அவ்விருவரின் மகோன்னதத்தை மூவுலகும் அறியும் வண்ணம் விளையாடத் தொடங்கினார்.

ஆதவனை ஆதிசிவன் பார்க்க அவன் இன்னும் பிழம்பானான். தன் பிரகாசத்தை அப்பிரதேசம் முழுதும் பரப்பினான், சோற்றுத்துறையில் தீத்தாண்டவமாடினான். வருணன் வராது சோம்பிச் சிறுத்து மறைந்திருந்தான். ஆளுயர செந்நெற்கதிர்கள் கருகி அங்குலமாக குறுகி மக்கி மண்ணாகிப் போயின. பூமி பிளந்து நீரில்லாது வறண்டது. அடியார்கள் ‘சோழநாடே சோறுடைத்து என்பார்களே, வயல் வெளிகளெல்லாம் வாய்பிளந்து கிடக்கும் அவலமென்ன’ என கைதொழுது நின்றழுதனர். அருளாள தம்பதியர் தவித்தனர். நெற்கிடங்கு வெறுமையாவது கண்டு மனம் குமைந்தனர். தாங்கள் அன்னம் ஏற்காது போயினும் பரவாயில்லை, இறையடியார்கள் இன்னமுது செய்ய வேண்டுமே என கவலையில் தோய்ந்தனர். 

காலம் அதிவேகமாகச் சுழன்றது. சமையல் கலன்கள் காலிப் பானை களாயின. சோற்றுத்துறையே சோறுக்காக அலைந்தது. அருளாள தம்பதியர் மெய்வருந்தி, சோறுண்ணாது, துறையுள் உறையும் ஈசனின் சந்நதியே கதி என்று கழித்தனர். ராப்பகல் அறியாது கண்கள் மூடி தவமிருந்தனர். தீந்தவம் சுட்டெரிக்கும் சூரியனையே உரச, ஆதவன் ஓடி ஒளிந்தான். கயிலைநாதன் தம் அருட் கண்களை விரித்துப் பார்த்தான். குடம் குடமாக அரனின் அருளை கொட்டித் தீர்த்தான். அவ்விரு அடியார்கள் முன்பு எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரத்தை அவர்கள் முன் பரப்பினான், சோற்றுத்துறை சிவபெருமான். அன்னத்தை அட்சய பாத்திரம் பொங்கிப் பொங்கித் தந்தது. அந்த ஓதனத்தை சுரந்தது. 

அருளாள தம்பதியர் ‘ஓதன வனேசா... ஓதனவனேசா...’ என சொல்லி ஆனந்தக் கூத்தாடினர். (ஓதனம் என்றால் ‘அன்னம்’ என்பது பொருள்) மறைந்திருந்த வருணன் அதிவேகமாக வெளிப்பட்டான். அடை மழையால் ஆறுகளும், தடாகங்களும் நிரம்பி வழிந்தன. இயற்கை பொய்த்தாலும் தன் தாள் பணிய அரனின் அருள் துணை நிற்கும் என அந்த திவ்ய தம்பதியை முன்னிறுத்தி விளை யாடினார். அன்றி லிருந்து அட்சய பாத்திரம் கடலாகப் பொங் கியது. அவ்வூரை நெருங்கியோரை வயிறு நிறையச் செய்தது. 

சோற்றுத்துறைக்கு சிகரம் வைத்தாற் போல இன்னொரு விஷயமும் நடந்தேறியது. தவத்தில் ஆழ்ந்திருந்த கௌதம மகரிஷி சட்டென்று கண்கள் திறந்தார். தம் அகம் முழுவதும் சுயம்பு மூர்த்தியாக ஜொலித்த ஓதன வனேஸ்வரரைக் கண்டார். தாம் அங்கு அழைக்கப்படுவதை உணர்ந்தார். அடியார்களோடு சோற்றுத்துறையை விரைவாக நெருங்கினார். அருளாள தம்பதி, ஊராரோடு திரண்டு நின்று கௌதமரை கைதொழுது வரவேற்றனர். ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார், முனிவர். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூறினார். ஈசன் இன்னும் ஒருபடி மேலே போய் அவ்வூரையே சோற்றுக் கடலில் ஆழ்த்திவிடக் கருதினார். 

அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை தமது அருட் கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தன. நெல்மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பதைப் பார்த்த அடியார்களும், பக்தர்களும் ‘நமசிவாய... நமசிவாய...’ என விண்பிளக்க கோஷ  மிட்டனர். ஈசனின் பேரணை யாலும், கௌத மர் எனும் மகா குருவின் அண்மை யாலும் அவ்வூர் வள மாகத் திகழ்ந்தது. அதேநேரம், திருமழபாடியில் திருநந்திதேவரின் திருமண ஏற்பாடுகளில் தேவாதி தேவர்களும், கந்தர் வர்களும், ரிஷிகளும், சாமான்ய மனிதர்களும் கலந்து கொண்டனர். 

பூந்துருத்தியிலிருந்து மலர்கள் குவிய, வேதிக்குடியிலிருந்து வேதியர்கள் கூட்டம் கூட்டமாய் வர, சோற்றுத்துறையிலிருந்து அன்னம் குன்றுகளாக குவிக்கப்பட்டது. சோற்றுத்துறை நாதனின் அருள் மணம் அன்னத்தோடு இயைந்துக் குழைந்தது. அமுதமாக ருசித்தது. உண்டோர் பெரும்பேறுற்றனர். திருச்சோற்றுத்துறை சுடர்விட்டுப் பிரகாசித்தது. திருச்சோற்றுத்துறை, அழகிய கிராமம். நான்கு வீதிகளோடும், இரு பிராகாரங்களோடும் கிழக்குப் பார்த்த கோயில் இன்னும் எழிலாக்குகிறது. புராணப் பெருமையும், வரலாற்றுப் புகழும் கொண்ட திருச்சோற்றுத்துறைக் கோயில் இருதளக் கற்றளியாக சதுர விமானமுடன் எடுப்பித்திருக்கிறார்கள். முதலாம் ஆதித்த சோழன் திருப்பணி புரிந்திருக்கிறான். 

ராஜராஜ சோழனின் 15-ம் ஆட்சியாண்டின் போது அளிக்கப்பட்ட நிவந்தங்களை கல்வெட்டுகள் அழகாகப் பகருகின்றன. மேலும், நுளம்பர் காலக் கலைப்பணியை கண்ணுறும்போது இத்தலத்தின் தொன்மை பிரமிப்பூட்டுகிறது. கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கரு வறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதி அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும் மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு ‘அமுது செய்தீரா...’ என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது. 

அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்ற கோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது. இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழ்கிறார் ஓதனவனேஸ்வரர் எனும் தொலையாச் செல்வர். சமயக்குரவர் மூவர் பாடி பரவசமடைந்த தலம் இது. தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்பு லிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. 

வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன். நேர்த்தியான வடிவமைப்போடு திகழும் அழகுப் பிராகாரம். கருவறைக் கோஷ்டங்களில் தென்முகக் கடவுள் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து அமைதி தவழும் முகத்தோடு அருள்பாலிக்கிறார். திருமால் நின்று வழிபட்டதால் பிராகாரத்தில் நாராயணப் பெருமாள் விளங்குகிறார். அதேபோல உட்பிராகாரத் தில் அழகிய ஐயனார் சிலையும், தனிக்கோயில் மகாலட்சுமியும், பஞ்சபூத லிங்கம் என அழகே அணிவகுத்து நிற்கின்றனர்.  

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் அம்பாள் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். எழில் கொஞ்சும் தென்னந் தோப்பிற்கு நடுவே நின்றிருக்கிறாள் அன்னை. சோறூட்டும் அன்னையாதலால் இவள் ‘அன்ன பூரணி’யெனும் நாமத்தோடு திகழ்கிறாள். நெடிய திருமேனி கொண்டவள், குளிர் பார்வையால் மனதை நிறைக்கிறாள். கண்கள் மூடி கரம் குவிக்க வாஞ்சையோடு பார்க்கும் நாயகி. அன்னபூரணி அன்னம் மட்டுமல்லாது வாழ்வின் அனைத்தையும் அளிக்கும் பூரண சொரூபி. பசிப்பிணி தாண்டி பிறவிப் பிணியை அறுப்பவள் இவளே. இத்தலம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரி லிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

KEEZHAMBUR PERUMAL FOR UNITING COUPLE

அத்திரி முனிவருக்கு இரண்டு சீடர்கள் இருந்தார்கள். ஒருவன் முனிவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கங்கையில் நீராடுவதற்காக சென்றான். அடுத்தவனுக்கும் அவ்வாறே  நீராட ஆசைதான். ஆனால், குருவிற்குச் செய்ய வேண்டிய சேவைகள், தானும் இல்லாவிட்டால் பாதிக்குமே என்று தயங்கி, தன் ஆசையைத் தனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டான். ஆனால், முனிவருக்கு இந்தச் சீடனின் ஏக்கம் புரிந்தது. உடனே தன் தண்டத்தை எடுத்து தரையில் அடித்தார். அங்கேயே கங்கை நீர் ஊற்றாகப் பொங்கி, நதியாகப் பிரவாகம் எடுத்தது. முனிவர், வடக்கே ஓடும் கங்கையிலிருந்து நீரைக் கடனாகப் பெற்ற வகையில் இந்த நதி ‘கடனா நதி’ என்றழைக்கப்பட்டது. 

இந்நதியில் சீடன் நீராடி மன அமைதி பெற்றான். ஒருபோதும் வற்றாத ஆறு என்பதால் கடனா நதியைக் ‘கருணை நதி’ என்றும் அழைக்கிறார்கள். இந்நதியின் தென்பகுதியில் (வலப்புறம்) கீழாம்பூர் அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் பூமிதேவி - நீளாதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, அனுபவம். கல்வெட்டு செய்திப்படி ஆம்பல் பூக்கள் அதிகம் காணப்பட்ட ஊர் என்பதால் ‘ஆம்பலூர்’ என்று இத்தலம் அழைக்கப்பட்டிருக்கிறது. வடமொழியில் இவ்வூரை ‘சிநேகபுரி’ என்று சொல்கிறார்கள். சிநேகம் என்றால் அன்பு. புரி என்றால் ஊர். அன்பு+ஊர் அன்பூராகி பின்னர் பேச்சு வழக்கில் ஆம்பூராகியிருக்கிறது.

ஆம்பூர் மக்கள் முதலில் சன்யாசி மேடு என்னும் பகுதியில் வசித்து வந்ததாகவும் பின்னர் ஏற்பட்ட சேர-சோழ-பாண்டிய போர்களின்போது, கி.பி. 1500 வருடவாக்கில் மேற்கு நோக்கிச் சென்று, ஊரின் தெற்குப் பகுதியில் முதல் குடியிருப்பை அமைத்ததாகவும் சொல்கிறார்கள். பின்னர் ஊரின் வடபகுதியிலும் குடியிருப்புகள் உண்டாயின. முதலில் தெற்குத் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயமும், பின்னர் வடக்குத் தெருவில் பெருமாள் ஆலயமும் நிர்மாணிக்கப்பட்டன. இவ்விரு ஆலயங்களுக்கும் நடுவில் பொதுவாக சிவன் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி, அம்பாளும் அருள் பாலிக்கிறார்கள். ஊரின் வடபகுதியில் முதலில் விநாயகப் பெருமானுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. 

தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் பெயர் வெங்கடேசப் பெருமாள். தாயார்கள், பூமிதேவி-நீளாதேவி. பெருமாளின் வலதுபுறம் பூமாதேவியும் இடதுபுறம் நீளாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மூலவர் சந்நதிக்கு எதிரே கருடாழ்வார் காட்சி தருகிறார். வெளி பிராகாரத்தில் வேப்ப மரத்தடியில் நாகப் பிரதிஷ்டைகளும் உள்ளன. கீழாம்பூரில் சத்திரத்தை ஒட்டிய பகுதியில் எடுக்கப்பட்ட கல்வெட்டில் வட்டெழுத்தில் ஒரு பாடல் இருக்கிறது. வேணாட்டு அரசன் ரவிவர்மனைக் குறித்த செய்தியும் உள்ளது. கேரள அரசன் தன் மனைவியிடம் கோபம் கொண்டு அவளை விட்டு நீங்கியிருந்ததாகவும் பின்னர் கீழாம்பூரிலுள்ள தெற்குத் தெருவில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து, அவர் அருளால் ஒன்று சேர்ந்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஆலகால விஷத்தைச் சிவபெருமான் உண்டார். இதனைப் பார்வதி தேவிக்குத் தெரிவிக்க உடனே புறப்பட்டார், நீளாதேவி. தன் கணவரின் தங்கையாகிய பார்வதியிடம்  நீளாதேவி விவரம் சொல்ல, ஓடோடி வந்த பார்வதி, சிவபெருமானின் கழுத்துப் பகுதியைப் பிடிக்க, அவர் நீலகண்டரானார். அவ்வாறு நீளாதேவி உடனடியாகப் புறப்பட்ட காரணத்தால், இக்கோயிலில் வெங்கடேச பெருமாள் மற்றும் பூமிதேவி சிலைகளைவிட நீளாதேவி சற்று முன்னே அமைந்திருக்கிறார். கடன் தொல்லையிலிருந்து விடுபட இந்த வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு வந்து வளர்பிறை சதுர்த்தியன்று ஹோமங்கள் செய்தால் கடன் தொல்லை நீங்கும்; 

வேகமாகப் புறப்படும் தோரணையில் முன் வைத்த காலுடன் நிற்கும் நீளாதேவியை வேண்டி வழிபட்டால் குபேர யோகம் உண்டாகும்; அனைத்து வியாதிகளும், விஷ சம்பந்தமான நோய்களும் இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு எளிதாக நீங்கும்; கணவன் - மனைவியிடையே கருத்து வேற்றுமை இருந்தாலோ அல்லது விவாகரத்து வரை செல்லும் வழக்காக இருந்தாலோ, இக்கோயிலில் வந்து வழிபட்டால், வேணாட்டு அரசன் ரவிவர்மனுக்கு மனைவியோடு மீண்டும் சேரும் பாக்கியம் கிடைத்ததைப் போன்ற நற்பலன்கள் கிட்டும் என்கிறார்கள்.

மூலவர் கருவறையில் காட்சி தருவதுபோலவே, பூமிதேவி-நீளாதேவியுடன் அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாகவும் தரிசனம் தருகிறார். மணிமண்டபம் இரண்டு மணிகளைக் கொண்டதாக உள்ளது. இங்குள்ள வலப்புற தூணில் யோக நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் மூலவரை நோக்கியபடி கருடாழ்வார் கொலுவீற்றிருக்கிறார்.  கோயிலைச் சுற்றி பிராகாரத்தில் பலவகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வில்வ மரம் வான்நோக்கி வளர்ந்துள்ளது. கோயிலின் வலப்புறம் அமைந்துள்ள கிணற்றை ஒட்டிக் கீழ்பகுதியில் நெல்லி மரமும், வேப்ப மரமும் உள்ளன. 

இவ்விரண்டு விருட்சங்களுக்கும் கார்த்திகை    ஞாயிற்றுக் கிழமைகளில் பூஜை  நடப்பதுண்டு. நெல்லி மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோயிலில், பித்தளை நாகருடன் காட்சி தரும் தேக்கு மரத்தாலான சேஷ வாகனம் உள்ளது. பித்தளை வார்ப்புடன் கூடிய கருட வாகனமும் உண்டு. சிறியதாக ஒரு கேடயமும் உள்ளது. குபேரன், இந்திரன், சுதர்சன பாண்டியன் மற்றும் சிநேகபுரியான் என்றழைக்கப்படும் கேளையப்பன் போன்றோர் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டிருக்கிறார்கள்.

மன்னன் சுதர்சன பாண்டியன், பிள்ளைப் பேறு இல்லாமல் பல காலம் வேதனைப்பட்டான்.   ஆம்பூர் வெங்கடேசப் பெருமாள் கீர்த்தியைக் கேள்விப்பட்ட இம்மன்னன், இவ்வூருக்கு வந்து வாசம் செய்து, அசுவமேத யாகம் செய்தான். வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து யாகத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு, முறைப்படி யாகத்தைத் தொடங்கினான். அவனுடைய பக்தியின் ஆழத்தை சோதிக்க விரும்பினார் ஈசன். உடனே தன் மகன் சுப்ரமணியரை அனுப்பி, மன்னனின் அசுவமேத யாகக் குதிரையைக் கட்டச் சொன்னார். 

அவர் உத்தரவுப்படியே சுப்ரமணியர் செய்ய, வெகுண்டான் மன்னன். முழுமை பெறாத யாகத்தால், சுப்ரமணியரால் ஏற்பட்ட இடையூறால், தன் எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று பதைபதைத்தான். ஆகவே, யாகக் குதிரையைக்  கட்டி வைத்திருப்பவர் யார் என்று உணராமல், கோபத்துடன் சுப்ரமணி யருடன் போரிட முன் வந்தான். அவரும் அவனை எதிர்கொண்டார். ஆனால், தனக்கு எதிரியாக எதிரே நிற்பவர் முன், தான் பலமெல்லாம் இழந்ததை உணர்ந்தான் மன்னன். தான் போரிடுவது தெய்வாம்சத்துடன்தான் என்பதை உடனே புரிந்துகொண்டான். 

அதே சமயம் ஒரு பேரொளி தோன்றி, அவனை ஆட்கொண்டு, ஆசியளித்தது. அது ஈசனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்துகொண்ட பாண்டியன், சிவசைலநாதரையும், சுப்ரமண்யரையும் உளமாற வணங்கினான். வாயாரப் புகழ்ந்தான். அவர்களுடன் சிநேகமானான். அதன் பலனாக அவர்களிடம் ஆசி பெற்று, நேராக வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்தான். சிவ - வைணவ ஒற்றுமைக்கு இந்தத் தலம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

சுதர்ஸன பாண்டியன் சிவசைலநாதரிடம் அருள் பெற்று, பின்னர் பெருமாளிடம் தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்துகொண்டதை நினைவுபடுத்தும் வகையில், உற்சவர் சிவசைலநாதர் கீழாம்பூருக்கு (சிநேகபுரி) வரும்போது, அவருக்கு அனைத்துவிதமான மரியாதைகளையும், வடக்குத் தெரு மற்றும் தெற்குத் தெருவிலுள்ள இரண்டு பெருமாள் கோயில்களில் அளிக்கப்படுகின்றன. கீழாம்பூருடன் தொடர்புடையது சிவசைலநாதர் ஆலயம். சிவசைலத்தில் குடிகொண்டுள்ள ஈசன், அன்னை பரமகல்யாணியுடன் காட்சி தருகிறார். 

கீழாம்பூரில் வடக்குத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டு, அசரீரி வாக்குப்படி சிவசைலத்தில் அம்பாளாய்ப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் அன்னை. ஆம்பூர்-ஆழ்வார்குறிச்சி மக்கள் கொண்டாடும் தெய்வமான சிவசைல நாதர், தன் மனைவி பரமகல்யாணியுடன் மறுவீட்டிற்காகக் கீழாம்பூருக்கு மே மாதம் வரும் வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வஸந்த உற்சவம் மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாள் ஊருக்கு வருகை புரிந்து ஊர் பவனி வந்து, முதன் முதலில் தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் கோயிலில் (தன் அண்ணன் வீட்டில்!) இளைப்பாற்றிக் கொள்கிறார் அம்பாள். 

நைவேத்தியம், தீபாராதனைகளை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் வடக்குத் தெரு பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்கே பல அபிஷேகங்களைக் கண்டு, இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு மூன்றாம் நாள் காலை தன் நாதருடன் சிவசைலம் சென்றடைவார், ஊர் மகளான பரமகல்யாணி. சிவசைலநாதரும் வெங்கடேசப் பெருமாளும் இணைந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலமான கீழாம்பூர், தென்காசி-அம்பாசமுத்திரம் பஸ் மார்க்கத்தில் (ரயில் மார்க்கத்திலும்) ஆழ்வார்குறிச்சிக்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது. 

MANIMANGALAM RAJAGOPALA PERUMAL

பூர்ணாவதாரப் புருஷன் என்று போற்றப்படும் கிருஷ்ணனுக்கு இரத்தினாக்ரஹாரம் என்ற மணிமங்கலம் திருத்தலத்தில் ஒரு கோயில்
உருவாகியிருக்கிறது. நரசிம்மவர்ம பல்லவன், சாளுக்கியர்களுடன் கி.பி. 612ல் போர் செய்து வெற்றி கொண்ட இடம்தான் மணிமங்கலம். இச்செய்தி முதலாம்  பரமேசுவரவர்மனின் கூரத்துச் செப்பேடுகளிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது. தான் பெற்ற வெற்றியின் சின்னமாக மாமல்லன், மணிமங்கலத்தில் பல  திருக்கோயில்கள் கட்டினான். அவற்றுள் ஒன்று ராஜகோபாலப் பெருமாள் திருக்கோயில்.

தமிழகத்தில் பகவான் கிருஷ்ணனுக்கு உரிய ஆலயங்களில் குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கிறது இந்தக் கோயில். அமைதியான கிராமத்தின் எல்லையில்  ஏரிக்கரையையொட்டி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்ளே பலிபீடத்தையும் கொடிமரத்தையும் தரிசித்து கருடாழ்வார் சந்நதியைக் கடந்து கரு வறை மண்டபத்துள் நுழைகிறோம். இத்தல அனுமன் காவியுடை அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். கருவறையின் மாமாயக்  கண்ணன், ராஜகோபாலப் பெருமாள் என்ற திருப்பெயர் கொண்டு, ஸ்ரீதேவி-பூமிதேவித் தாயார்களுடன் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறான்.

பீடத் துடன் சுமார் ஒன்பதடி உயரம் கொண்ட பெருமாளுக்கு நான்கு திருக்கரங்கள். மேல் வலக்கரத்தில் சங்கும், மேல் இடக்கரத்தில் சக்கரமும் (மற்ற  தலங்களில் வலக்கரத்தில் சக்கரமும், இடக்கரத்தில் சங்கும் அமைந்திருக்கும்) தரித்து, கீழ்வலக்கரம் அபயஹஸ்தமாய் அருள, இடக்கரம் கதாயுதத் தைப் பற்றிய நிலையில் கதாஹஸ்தமாகத் திகழ்கிறது. பெருமாளின் திருமேனி அழகு நம்மை மெய் மறக்கச் செய்கிறது. பெருமாளைத் தரிசித்த பி ன்னர், கருவறை மண்டபத்திலேயே அமைந்திருக்கும் சிறிய சந்நதியில் ஆழ்வார்- ஆசாரியர்களைத் தரிசிக்கலாம்.

கருவறையை விட்டு வெளியே வந்து பிராகார வலம் வருகையில் தெற்குப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் செங்கமலவல்லித் தாயார்  தனிக்கோயில் கொண்டு, அமர்ந்த நிலையில் திருக்காட்சி தருகிறாள். தாயாரை தரிசித்த பின்னர், வடக்குப் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் சந்நதி அமைந்திருக்கிறது. தீந்தமிழில் பாமாலை தொடுத்துச் சூட்டி மாதவனில் கலந்த இந்தக் கோதையைப்  போற்றி வணங்குகிறோம்.

ஸ்ரீஜெயந்தி, திருக்கார்த்திகை, பவித்ர உற்சவம் 3 நாட்கள், திருப்பாவாடை உற்சவம் (புரட்டாசி பௌர்ணமியில்) ஆழ்வார், ஆசார்யாள் வருஷ திருந ட்சத்திரம் (சாத்து முறைகள்) புரட்டாசி முதல் மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் வீதி புறப்பாடு போன்ற விழாக்கள் இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்டாலும், பிற்காலச் சோழ மன்னர்கள் பலர் இத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள்  செய்ததுடன் பல வகையான தானங்களையும் அளித்திருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இத்திருத்தலத்திற்கு மதப்புரட்சி செய்த மகான்  ராமானுஜர் எழுந்தருளியதாகக் கூறுகிறார்கள். அதற்கான சான்றுகள் இல்லையென்றாலும், சாத்தியம் இருக்கிறது. காரணம், எம்பெருமானார் அவதரி த்த ஸ்ரீபெரும்புதூர் திருத்தலம் இத்திருத்தலத்திற்கு அருகில்தான் அமைந்திருக்கிறது. நாடி வந்து வணங்கு பவர்க்கெல்லாம் ராஜ போகங்களை நாளும் அருளும் ராஜகோபாலப் பெருமாளைத் தரிசித்து, நல்லன எல்லாம் பெறுவோம். சென்னை-தாம்பரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. 55-என், 55-எஸ், எம்62-ஹெச், எம்-80 ஆகிய பேருந்துகளில் சென்று  மணிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம்.
மடுகரை

வெற்றிகளை அள்ளித்தரும் துர்க்கா தேவி, கொற்றவையின் அம்சம். சிவனுக்கு உகந்த இந்த துர்க்கை, எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு இடப்புறம் தனக்கென்று ஓர் இடம் பிடித்து, வடக்கே முகம் காட்டி அருள்மழை பொழிபவள். அந்த வகையில் புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம், கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள மடுகரை என்ற கிராமத்தில் தனியே கோயில் கொண்டு, தன்னாட்சி நடத்துகின்றாள் துர்க்கை. வித்தியாசமாக இத்தலத்தில் இவள் கிழக்கே  திருமுகம் காட்டி எழுந்துள்ளாள். எட்டு கரங்கள் கொண்டு சிம்மத்தின் மீது வீற்றிருந்து பக்தர்களைக் காத்திடும் காவல் தெய்வமாய் காட்சியளிக்கிறாள். இந்த  துர்க்கை, கோயில் கொண்ட நாள் முதல் பக்தர்களது கனவில் வந்து, அவர்களிடம் பேசி,  அவர்கள் குறைகளை களைவது வழக்கம். அப்படியொரு நாள் இரவு  தனது கோயிலுக்கு அருகே வந்த ‘இருசப்பன்’ என்ற பக்தனைத் தட்டி எழுப்பி தனது சூலாயுதத்தை திருடன் ஒருவன் திருடிக்கொண்டு ஏரிக்கரை மீது  செல்வதாகச் சேதி சொன்னாள். உடனே ஊரார் துணையோடு ஓடிச்சென்ற இருசப்பன் சூலத்தை மீட்டு வந்தான். இப்போது அந்த சூலாயுதம் சுதை வடிவ துர்க்கையின் கரத்தில் தவழ்கிறது. இதுபோன்ற அற்புத சம்பவங்கள் இவளால் இங்கு நித்தமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்னைக்கு விளக்கேற்றி, குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் குறைகளைக் களைந்து அன்பர் வாழ்வில் குதூகலத்தை ஏற்படுத்தும் அன்னை இவள். அதோடு, இங்கு தனியே சனீஸ்வர பகவான் எழுந்தருளி அனுகிரகம் செய்வதால், இவர் அனுக்கிரக சனி எனப் போற்றப்படுகின்றார். எங்குமே காணக் கிடைக்காத வட்ட வடிவ அமைப்பில் நவகிரகங்களை இங்கு தரிசிக்கலாம்.  ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், அன்னதானமும் நடைபெறுகின்றன. நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் மிகவும் கோலாகலமாக இருக்கும்.  நிவேதன பிரசாதத்தோடு, குங்குமமும், வளையலும் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்பது நாளும் ஒன்பது வகையான அலங்காரத்தில் அன்னை அஷ்டபுஜ துர்க்கை இங்கே அழகாய் திகழ்வாள். பக்தர்களிடம் நேரில் பேசும் இந்த எட்டுக்கர துர்க்கையை வழிபட, திருமணத்தடை நீங்கும். பிள்ளை வரம் கிட்டும். வழக்குகள் வெற்றியாகும். வம்புகள் தீரும். செல்வ வளம் கூடும். சிறப்புகள் வந்து சேரும் எங்கும், எதிலும் வெற்றி பெறலாம். எதிரிகள் நடுங்குவர்.  விழுப்புரம்-புதுச்சேரி செல்லும் பேருந்து களில் மடுகரை வரலாம். நெடுஞ்சாலையை ஒட்டியே ஆலயம் அமைந்துள்ளதால் இங்கு வருவது மிகவும் சுலபமாகும்.

சின்னக்காவணம் 

சென்னை - பொன்னேரிக்கு அருகில் உள்ளது சின்னக்காவணம் கிராமம். இங்கு 500 வருடப் பழமையான நூற்றெட்டீஸ்வரர் திருக்கோயில்  அமைந்துள்ளது. வடமொழியில், அஷ்டோத்ர ஈஷ்வர். இந்த ஊருக்கு பழங்காலத்தில் சதுர்வேதபுரம் என்றொரு பெயர் இருந்திருக்கிறது. ஒரு மாலைப் பொழுதில் இங்கு வந்த அகத்தியர், சிவபூஜை செய்ய விரும்பினார். அருகிலேயே பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த ஆற்று மணலை  எடுத்து, அருகிலிருந்த அங்கோள மரத்தடியில் நூற்றியெட்டு சிவ லிங்கங்களை உருவாக்கினார். ஆனால், இந்தச் செயலுக்கு முன்னால் வழக்கமாக  அனுசரிக்க வேண்டிய விநாயகர் பூஜையை செய்ய மறந்துவிட்டார். அதனால் அவர் 108வது லிங்கம் செய்ததும், அவை யாவும் ஒன்று சேர்ந்து ஒரு  விநாயகர் வடிவமாகிவிட்டன! (இன்றும் அந்த அங்கோள மரத்தடியில் விநாயகர் மூஞ்சூறு வால் போன்ற மிகச் சிறிய தும்பிக்கையுடன் அருளை  வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த அங்கோளப் பிள்ளையாருக்கு நேர்ந்துகொண்டு வடைமாலை சாற்றி வழிபட்டு, பலன் பெற்றோர் பலருண்டு.) தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகர் பூஜை செய்து, பிறகு, ஒரு சிவ லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கம் நூற்றெட்டீஸ்வரர்  என்கிற பெயரில் மூலவராகவே அமைந்துவிட்டது. நூற்றெட்டீஸ்வரி எனும் திருநாமத்தோடு அம்மனும் அருள்பாலிக்கிறாள். இந்தச் சிலை அங்கோள விநாயகருக்கு எதிரில் அமைந்துள்ளது. சதுர்வேதபுரமாக இத்தலம் விளங்கியபோது ஈஸ்வரன் சதுர்வேதபுரீஸ்வரராகவும், அம்பாள் சிவகாமி அம்மையாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். தெற்கு நோக்கி காட்சியளிக்கும் இந்த அம்பிகை, இரு கரங்களிலும் மலரேந்தி மகாலட்சுமி அம்சத்துடன் விளங்குகிறாள். அடுத்து இங்கு காண வேண்டியது  நடராஜர்-சிவகாமி உற்சவ விக்ரகம். 

இது ஒரு அற்புதமான கலைப் படைப்பாக விளங்குகிறது. இங்குள்ள பைரவர் மிகப் புராதனமானவர். வெளிச்சுற்றில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார். நல்ல உயரமாகவும் பெரிய ஆகிருதியுடனும் உள்ள ஊர். இவரைப் பிரார்த்தித்துப் பலன் அடைந்தோர் ஏராளம். துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், சிவசூரியன், நவகிரகங்கள்  ஆகியோரும் சந்நதி கொண்டு அருள்கிறார்கள். இக்கோயிலுக்கு அழகிய துவஜஸ்தம்பம் இருந்தாலும் 1919ம் ஆண்டுக்குப் பிறகு இக்கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடக்கவில்லை என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது. 1919ம் ஆண்டைய பிரம்மோற்சவ பத்திரிகையை இங்கே சட்டம் போட்டு மாட்டி வைத்திருப்பது, இக்கோயி லுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் ‘எப்போது மீண்டும் பிரம்மோற்சவம் நடத்தப் போகிறீர்கள்?’ என்று ஏக்கத்துடன் கேட்பது போல இருக்கிறது. கரையான் அரித்திருக்கும் அந்த பத்திரிகை தன் பழமையையும் கோயிலின் ஒரு நூற்றாண்டு காத்திருப்பையும் உணர்த்தி நெஞ்சைக்குத்துகிறது. 

இப்போது கோயிலில் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. பங்குனி உத்திரத்தில் சுவாமியின் கல்யாண உற்சவம், மார்கழியில் திருவாதிரையை ஒட்டி  மாணிக்கவாசகர் திருவிழா பத்து நாள் உற்சவம், ஊர்வலம் என்று நடைபெற்றாலும் பிரம்மோற்சவம் காணாதது ஆழ்ந்த வருத்தத்துக்குரியது. தலமரம் அங்கோளம் என்ற அழிஞ்சில் மரம். இதன் விதைகள் கீழே விழுந்தாலும் மீண்டும் இம்மரத்தின் கிளைகளில் போய் ஒட்டிக் கொண்டுவிடும்! இந்த மரத்திற்கு பெருநோயைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. முழுமை பெறாததாக விநாயகரின் வடிவம் அழிஞ்சில் மரத்தடியில் காணப்படுகிறது. இந்த மரம் மற்றும் கோயில் பற்றி காஞ்சி பரமாச்சார்யார் தம் அருளுரைகளில் சிறப்பித்திருக்கிறார்.

பொன்னேரியில் உள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், சித்திரை மாதப் பௌர்ணமி அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி அருகிலுள்ள அனுமார்  கோயிலுக்கு வந்து சேரும். அதேசமயம் பிரம்மோற்சவத் திருவிழாக் காணும் ஆயர்பாடி ஹரி கிருஷ்ணப் பெருமாள் இங்கு வந்து சேர்ந்து  மாப்பிள்ளை குடும்பத்தாரும் மைத்துனருமாய் சேர்ந்து அருள் தருவார்கள். பரத்வாஜ மகரிஷிக்கு இப்படிப்பட்ட கோலத்தில்தான் இறைவர்கள்  தரிசனம் தந்ததாகவும், அதனால் இவ்விழா நடப்பதாகவும் கூறுகிறார்கள். சைவ-வைணவ இணக்கத்தை உறுதிப் படுத்துவதுபோல் பொன்னேரியில் உள்ள கடைத்தெருப் பகுதி ஹரிஹரன் பஜார் என்றழைக்கப்படுகிறது.  வடலூர் ராமலிங்க வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊரும் சின்னக்காவணம்தான். ராமலிங்க வள்ளலார் பிறந்த எட்டாம் மாதம்  தகப்பனார் காலமானதால்,  சின்னம்மையார் பிறந்த வீட்டுக்கே, அதாவது, சின்னக் காவணத்துக்கே குழந்தையுடன் வந்து விட்டார். 

கி.பி. 1824  முதல் 1826 வரை வள்ளலார் இங்குதான் வளர்ந்தார். தாயார் அவரை அடிக்கடி நூற்றெட்டீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சி ன்னம்மையார் வாழ்ந்த வீடும், அவர் தண்ணீர் எடுத்த கிணறும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறப்புகள் பல கொண்ட இந்தத் திருத்தலத்தின் நாயகனாம் நூற்றெட்டீஸ்வரர் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்திப் பார்க்க பல சிவ அன்பர்கள்  ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

THIRUMOHOOR 

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், அர்ச்சாவதாரம் உருவத் திருமேனி கொண்டு நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் 108 கோயில் களில் காட்சி தருகிறார். நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் 60 கோயில் களில் ஒன்றுதான். மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற இக்கோயிலில் கருணைக் கடலான காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார். திருப்பாற்கடலில் கடைந் தெடுத்த அமுதத்தை தேவர்களுக்கு பெருமாள் வழங்கிய இடம் தான் திருமோகூர். 

12 ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான நம்மாழ்வாரும், கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  கிருத யுகத்தில் இந்திரன், துர்வாசரை மதிக்காத குற்றத்திற்காக சாபம் பெற்றான். அவனுடைய செல்வங்கள் பாற்கடலில் மறைந்தன. இந்திராதி தேவர்கள் வலிமை யிழந்தனர். அசுரர் வலிமை அதிகரித்தது. இறவாமல் இருக்க நினைத்த தேவர்கள், பாற்கடலை கடைந்து அமுதம் பெற நினைத்தனர். மேரு என்கிற மந்திரமலையை குடைபோல் கவிழ்த்து மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் திரித்து தேவர்களும், அசுரர்களும் மாபெரும் சப்தத்தோடு கடையத் தொடங்கினார்கள். 

மெல்லமெல்ல அவ்விடம் வெம்மையாய் தகிக்க ஆரம்பித்தது. சட்டென்று கடுமை யான நெடியோடு காளகூடம் என்ற நஞ்சு, வாசுகி பாம்பினின்று பொத்துக் கொண்டு வெளியே எழுந்தது. அதன் வெம்மை அங்குள்ள வர்களை பொசுக்குவதுபோல் இருந்தது. அதைத்தாங்க முடியாத தேவக்கூட்டம் மஹாதேவனிடம் ஓடியது. ஈசன் நஞ்சை எடுத்து  அருந்தி, திருநீல கண்டனானார். பிறகு பாற்கடலில் இருந்து உச்சைச்ரவஸ் என்ற குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை, நினைத்ததை கொடுக்கும் கற்பகமரம், சந்திரன், அகலிகை, திருமகள், கவுஸ்துபமணி ஆகி யன ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்பட்டன.

அதன் பிறகு வந்த அமுதத்தை பருக, தேவர்களும், அசுரர்களும் சண்டை யிட்டனர். தேவர்கள் வலிமை இழந்தனர். பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தா மனை வணங்கித் துதித்து, வழிகாட்டுமாறு  தேவியர்களிடம் வேண்டினர். தொட்டு எழுப்பினால் அபச்சாரம் என்று கருதி மானசீகமாக தேவர்களுக்கு அருளுமாறு தேவியர்கள் பெருமாளை பிரார்த்தித்தனர். அதையேற்று மனங்கவரும் மோகினியாய் வடிவத்தை மாற்றிக் கொண்டு திருக் கரங்களில் அமிர் தகலசத்தை ஏந்தினார் பெருமாள். பெண் ணழகில் மயங்கி அசுரர்கள் ஏமாற்றம் அடைய, தேவர்களுக்கு அமுதத்தை பங்கிட்டு கொடுத்தார். திருமாலாக காட்சி கொடுக்க வேண்டும் என்று தேவர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று, திவ்ய மங்கள திருவுருவாக, இங்கு காட்சி யளிக்கிறார்.

மூலவர் கிழக்கு நோக்கி காளமேகப் பெருமாள் எனும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சேவை சாதிக்கிறார். நீருண்டமேகம் போன்ற திருமேனியுடனும், சங்கு சக்கரங்கள் ஏந்திய திருக் கரங் களோடும், மேகம் கருணை கொண்டு மழைபொழிவதுபோல் இப்பெருமாள் அருள்மழை பொழிவதால் இவர் காளமேகப் பெருமாள் எனும் நாமம் பெற்றார். இவரை குடமாடு கூத்தன், தயரதம் பெற்ற மரகத மணித்தடம், சுடர் கொள் சோதி, திரு மோகூர் ஆப்தன் என்றும் ஆழ்வார்கள் பாடிப் பரவு கிறார்கள். இங்கு மூல வருக்கும் திரு மஞ்சனம் உண்டு. காளமேகப் பெருமாள் சந்நதிக்கு தெற்கு பக்கத்தில் தாயார் சந்நதி உள்ளது. 

மோகன வல்லி தாயார் என்றும் மோகவல்லி என்றும் திருமோகூர் வல்லி என்றும் அழைக்கப்படுகிறார். கருணை பொழியும் திருமுகத்தோடு காட்சி தருகிறார். வீதி உலா வரும்போது பெருமாள் மட்டும் கோயிலுக்கு வெளியே செல்வார். தாயார் எந்த காலத்திலும் கோயில் படியை தாண்டிய தில்லை. இதனால், தாயாரை படிதாண்டா பத்தினி என்று பக்தர்கள் போற்றுகின்றனர். இரண்டாம் திருச்சுற்றின் வடகிழக்கில் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் பிரார்த்தனா சயனத்தில் காட்சியருள்கிறார். துவாதசி நாளில் திருமஞ்சனம் செய்வித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

கோயிலின் தென்மேற்கு பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சந்நதி உள்ளது. திருமோகூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாழி ஆழ் வான் எனும் அற்புதப் பெருமான் சக்கரத்தாழ்வாரே ஆவார். திருமாலின் ஐந்து படைக்களன்களில் முதன்மையும், ஆதியந்தமுமில்லாததும், பெருமாளை விட்டு பிரியாததுமான சுதர்சனமுமே ஆகும். சுதர்சனம் என்றாலே காட்சிக்கு இனியவன், நல்வழிகாட்டும் நாயகன் என்று பல பொருள்கள் உண்டு. முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும், பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சிதரும்  திருக்கோலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.   
 
நாற்பத்தெட்டு தேவதைகள் சுற்றிலும் இருக்க, ஆறுவட்டங்களுக்குள் நூற்று ஐம்பத்து நான்கு எழுத்துக்கள் பொறித் திருக்க, பதினாறு திருக்கரங்களிலும், பதினாறு படைக் கலன்கள் ஏந்தி மூன்று கண்களுடனும் காட்சியளிக்கிறார். அவற்றில் மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருமுடி தீப்பரப்பி, நாற்புறமும் விரவி ஒளிர்கிறது. நரசிங்கப் பெருமான் நான்குவித சக்ராயுதங்களை ஏந்தி கால்களை மடித்து யோகநிலையில் காட்சியருள்கிறார். ஆனி மாதம் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரத்தில் இங்கு நடத்தப்படும் சுதர்சன வேள்வி காண்போரை களிப்புற வைக்கிறது. பங்கு கொண்டோரை பவித்ரமாக்குகிறது. 

இப்பெருமானை ஆறுமுறையோ, ஆறின் மடங்குகளிலோ வலம் வந்தால் எண்ணிய செயல்கள் சட் டென்று நிறைவேறுகின்றன. மரணபயம் அறுத்தும், மனோவியாதியை ஒழித்தும், கன்னியருக்கு மாலை கொடுத்தும், காளையருக்கு வேலை கொடுத்தும், மக்கட்பேறை மட்டிலாது அளித்தும், தொழிலில் ஏற்படும் தோல்வியை நீக்கி கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக நரசிம்ம சுதர்சனப் பெருமாள் அருளாட்சி நடத்துகிறார்.  காளமேகப் பெருமாள் சந்நதிக்கு வடக்கு பகுதியில் ஆண்டாள் சந்நதி உள்ளது. ஆடி வீதி எனப்படும் 2ம் திருச்சுற்றில் தெற்கே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் சந்நதி உள்ளது. நவநீத கிருஷ்ணனுக் கும் தனி சந்நதி உள்ளது. காளமேகப் பெருமாள் கோயிலில் நான் முகன் தவம் செய்துள்ளார். 

நான்முகனுக்கு தொல்லை கொடுத்த அரக்கர்களை கடலில் தூக்கி எறிந்த திருமாலுக்கு நன்றி செலுத்த உருவாக்கப்பட்ட பிரம்மதீர்த்த குளம் இங்கு உள்ளது.
கருட மண்டபத்தின் தென்புறத் தூண் ஒன்றில் கரும்புவில், மலர் கணையுடன் மன்மதன் சிற்பமும், எதிரேயுள்ள தூணில் மன்மதனை பார்த்தபடி அன்னப் பறவையில் ரதிதேவி சிற்பமும் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் சிற்பங்கள் காளமேகப் பெருமாளை நோக்கி காணப்படுகின்றன. 

கம்பத்தடி மண்டப தூண்க ளில் மருது சகோதரர்களின் சிற்பம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவோண நாளில் ஆப்தன் என்றழைக்கப்படும் உற்சவர் எழுந்தருளுகிறார். சித்திரை முதல் நாளில் காள மேகப் பெரு மாளை காண மக்கள் கூடுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு கூடும் கூட்டத்திற்கு கணக்கே இல்லை. நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் பிறந்ததால், விசாகத்தை நிறைவு நாளாக வைத்து பத்து நாள் திருவிழா நடத்தப்படுகிறது. திருத்தேரோட்டம், தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நடைபெறும். 


SREEVAANCHIYAM 
அத்ரி மகரிஷிக்கும், அனுசுயாவிற்கும் தத்தாத்ரேயர் மகனாகத் தோன்ற அருள் கிடைத்த தலம். சிவன் எமனை தமது வாகனமாகக் கொண்டுள்ள தலம். காசியில் இறந்தால் முக்தி ஆனால், பைரவ தண்டனை உண்டு. அதே ஸ்ரீவாஞ்சியத்தில்  இறந்தால் முக்தி கிடைப்பதுடன் பைரவ தண்டனையும் இல்லை என்பது சிறப்பு. இத்தலத்தில் இறக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் காது மேல் நோக்கிக் கிடக்கும்; அதில் சிவன் பஞ்சாட்சர உபதேசம் செய்வார் எனக் கூறப்படுகிறது. இத்தல திருக்குளத்திற்கு குப்த கங்கை எனப் பெயர். இந்த தீர்த்தத்தில் கங்கை தன் 999 கலைகளுடன் ரகசியமாக வசிக்கிறாள். ஆனால், காசியிலோ ஒரு கலையுடன்தான் இருக்கிறாள். அதனால் இது காசியைவிட மேலானது என்பர். இந்த குப்த கங்கையில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பஞ்சமா பாதகங்களும் விலகும். கார்த்திகை நீராடல் உற்சவத்தன்று சுவாமியும், அம்மனும் அஸ்திர தேவருடன் குப்த கங்கை கரையில் காட்சி தருவர்

MAHAALAKSHMIPURRESWARAR

'பறையொலியும் பாவொலியும் மற்றை
மறையொலியும் மண்டிப்பூம் பொழிலோடு
கூடிய திரிறின்றியூருறை யீசனே
கடனறுத்து பென்னொடு மணி நல்கி
பேரின்ப வெள்ளத்து மூழ்க்குவந் தன்னை
யேத்திச் சரணடைந் தார்க்கே'
என்பது அகத்தியரின் ஜீவநாடி வாக்கு.

கடனில் தத்தளித்து, பொருள் பற்றாக்குறையோடு ஏக்கம் மிக ஏந்தி வாழும் மக்கள்தம் குறை தீர பூலோகத்தில் வரம் அருளுகிறது திரிநின்றவூர் மகாலட்சுமிபுரி ஈஸ்வரர் கோயில். மன்னன் ஒருவன் சிதம்பர நடேசப் பெருமானை தினமும் தரிசிக்க இத்தல வழி செல்லுகையில், கையில் விளக்கேந்தி செல்வது வழக்கம். இத்தலத்தை அடைய திரி அணைந்தது. பின்னர் இத்தலம் தாண்டுகையில் தானே திரி எரிந்து நிற்க, இத்தலத்துக்கு திரி நின்றி ஊர் என பெயர் வந்தது. மகாவிஷ்ணுவும், திருமகளும் சேர்ந்து தொழுதமையால், திருநின்றியூர் என வழங்கப்பட்டது. மகாவிஷ்ணுவின் வர்ணம் நீலம். 

இங்குள்ள தீர்த்தத்திற்கு நீலப் பொய்கை என்றே பெயர். மந்த தோஷம் உடையோரும், சனியால் பீடிக்கப்பட்டோரும், பெரும் பிணியில் அவதியுறுவோரும் விமோசனம் பெறும் தீர்த்தம். மகாமக குளத்தில் நீராட இயலாதவர்கள் இத்திருக்குளத்தில் நீராட, சகல சுகபோகங்களும் சேரும் என்கின்றனர், சித்தர் பெருமக்கள். இங்குள்ள விநாயகருக்கு செல்வ கணபதி எனப் பெயர். பரசுராமர், ஜமதக்கினி ஆகிய முனிவர்களால் தொழுதேத்தப்பட்டவர். சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. சகல மேன்மைகளையும் தரவல்லவர்.

'தனம் வேண்டித் திரிவோர் தம்
இச்சை தீர்ப்பானிக் கணநாதன்
குபேர சம்பத்தை யருளுமிவனை
செல்வக் கணநாத னென போற்றுதுமே'
- என்ற சிவ வாக்கிய செய்யுள் போற்றத்தக்கது.

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் இந்த மகாலட்சுமிபுரீஸ்வரர், பரசுராமருக்கு காட்சி தந்தருளினவர். இத்திருக்கோயிலைச் சுற்றி மாலையிட்டதைப் போன்று மூன்று குளங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜமதக்கினி முனிவரின் பத்தினி வானில் சென்ற கந்தர்வனின் அழகை பிம்பமாகத் தண்ணீரில் ரசித்ததைக் கண்டு, வெகுண்டு, தனது மகன் பரசுராமனைக் கொண்டு அவளுடைய தலையை துண்டிக்கப் பணிக்க, கொடுஞ்செயலைச் செய்யச் சொன்ன தந்தைக்கும், கொலைபாதகத்தை செய்த மகனுக்கும் பெரும் தோஷம் பற்றியது. 

பற்றிய தோஷத்தை நீக்க, பரசுராமனும், ஜமதக்கினி முனிவரும் இத்திருத்தலத்தை அடைந்து பூஜிக்க, சிவபெருமான் காட்சி தந்து தோஷமகற்றி, வெட்டுண்டு மாய்ந்த தாய்க்கு மேன்மை அருளினார். இது நடந்தது அமாவாசைத் திதியில். இன்றும் அமாவாசை திதி அன்று இறந்தவர்களுக்கு சாந்தியும், சந்தோஷமும் தர, இத்திருத்தலத்தில் பூசை புரிந்தால் பூர்ண பலனுண்டு என்கின்றார் பாம்பாட்டியார்.

'பாண வடிவாம் பரிகேசன் பரசுராமனுக்
கன்னையை வதமாக்க மொழிந்த தோஷங்
கழிக்க நின்றனன் பரசுராமலிங்க மாய்,
மைந்தர்க் காய் நிலைத்தனன் தமை மதியிலா
திதி யேத்த வல்லார் குலத் தாவியர் தம்
அகமே யமைதியாகி யின்புறப் பாரே'

-எனும் செய்யுள் நமக்கு தெளிவைத் தருகிறது. பரசுராமருக்கு காட்சி தந்த இறைவன் 'பரசுராமலிங்கமாய்' இன்றும் பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கின்றார். ஜமதக் கனிக்கு காட்சி தந்த அருட்கடவுள் ஜமதக்னீஸ்வரர்' என்று சிறிய பாணவடிவிலும், 'பரிக்கேசுவரர்' என்று பெரிய பாணவடிவிலும் கொலு இருந்து பக்தர்கள் குறை தீர்க்கின்றார். திருவுடை மார்பன், மகாவிஷ்ணு அருகில் இருப்பது சாலச் சிறப்புடைத்து.

பயமின்றி வாழ, நோயற்ற வாழ்வு வாழ, பாவம் நீங்கி பெரும் சுகமெய்த, தனதான்ய ஐஸ்வர்யங்கள் சேர, அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரரை மாதுளம்பழ முத்துகளைக் கொண்டு அபிசேஷகம் செய்து தொழுவது சிறப்பு. இன்றும் கார்த்திகை மாதம் முழுவதும் தாய் ரேணுகாம்பாளுடன், ஜமத்கனி மகரிஷி உடன் பரசுராம மகரிஷி இத்தலத்தில் பூசை புரிகின்றார் என்கிறார் அகத்தியர்.

'அச்சமகலப் பிணிவாட வாட்டமிலா
பேரஸ்வரியமொடு பாவந்  நீங்கி
யின்பமே பெற பரசுராமரேத்து மிறை
தமை யீன்றாரோடு நின்று தொழ தேனாந்
திவ்களாண்டொன்றுந் தப்பாமே நிற்பதொப்ப
தொழுதெய்துவீர் யுலகத்தீரே'

என்ற ஜீவநாடி வாக்கியம் நுட்பமானது. மாதுளம் முத்துகள் மாணிக்க கற்களை யொத்தது. திருமகள் இந்த மாதுளம் முத்துக்களில் வாசம் செய்கின்றாள். இதனால் சிவபெருமானை அபிஷேகிக்க, அருச்சிக்க, சம்பத்துகள் குறைவின்றி சேரும்.

'பெண்டிர் மாங்கல்யத்திலு மஞ்சள் பூச்சிலுங்
குங்குமக் கைவளை பீதாம்பரத்துறை திருமகள்
மாதுளவித்திலுமமர யாராதனை திரிநின்றியூ
ரானை யாற்ற குறையகன்று பேரின்பஞ்
சேர சொன்னோஞ் சத்தியமே'

-என்று காகபுஜண்ட வாக்கு பறை சாற்றுகின்றது. அவசர புத்தியில் நாம பற்பல தவறுகளை செய்து விடுகிறோம். கணவன், மனைவி மனதை புண்படுத்திப் பேசுவதும், அவள் நோகும் வண்ணம் செய்யுங் கர்மங்களும் பெரிய பாவ தோஷத்தை உண்டாக்கும். வேடிக்கையாக சிலரைப் பற்றி பேசி சிரிப்பதும் அடுத்தவர் அறியாது அவரை ஏளனமாகப் பேசுதலும், எண்ணுதலும், எள்ளி நகையாடுதலும் பெரும் தோஷத்தை அள்ளித் தரும். 'தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பது முதுமொழி. ஒருவன் செல்வந்தன் என்றால் அவன் முன்னை வினை சிறப்புடையது என்பதே பொருள். 

முன் சொன்ன தோஷங்கள் நம்மை பெரும் துயருக்குள்ளாக்கும். தாய், தந்தையரைப் பேணா தோஷம், சகோதரரை வஞ்சித்த பாவம், வியாபாரத்தில் சொல்லும் பொய் இவை யாவும் வறுத்தும், பின்னை பிறவியில். இவற்றிலிருந்து விடுபட்டு, பிறப்பிலா பேரின்பம் பெற்ற இம்மையில் சுகபோகத்துடன் வாழ திருநின்றியூருறை உலகநாயகி அம்மனை தொழுதேத்துதல் அவசியம். எப்படிப்பட்ட பாவங்களை அறியாது செய்தால், அதற்கு விமோசனம் உண்டு. அறிந்து செய்யும் பாவங்களை 'சண்டாளம்' என்கிறார் பாம்பாட்டியார்.

'காமத்தால் கண்ட தோஷமொடு புறங்
கூறி பிறரை இழித்துரைத்து நின்ற ஏமமும்
நிறை நட்பை பழித்து வாணிப வழி தனமதுயற
மேபிசகிக் கூட்டிய பழியு மின்னோராயிரந் 
தோசந்தனை கருக்கிட நீலமலர்ப் பொய்கை
புகுந்து நீராடி வில்வமாந்தல விருட்சமாராதித்து
திரிநின்றவூரமர் பூவுலக நாயகி தமைத்
தண்டமடையப் போமே.'

சுயம்பு மூர்த்தியான இம்மகாலட்சுமி புரீசனை தொழுதேத்தாத தேவர்களே இல்லை எனலாம். மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை ஜோதி காலத்திலும் இவரை தொழுதக்கால் கிடைக்கும் பலன் மிகவும் அபரிமிதமானது. செல்வ கணபதி சுவாமியை அனுஷம் நட்சத்திரம் நாளில் தொழ வேண்டும். இப்படி பன்னிரண்டு மாதங்கள் விரதம் இருந்து சிரத்தையுடன் தொழுதபேருக்கு செல்வச் செழிப்பு கிடைக்கும் என்பது உண்மை.

'செல்வகணபதி தமையனுடத்தாராப்போர்
தம் அல்லல் போம் மனைதனில்
மிதக்கு மாஸ்தியே'

என்ற அகத்தியர் ஜீவநாடி நமக்கு தெம்பையும் உற்சாகத்தையும் தருகின்றது அன்றோ! கல்வியில் தேற, எண்ணியவாறு தொழில் கிட்ட, கிட்டிய தொழிலில் முன்னேறங்காண, பெருந்தனம் தேட, தேடிய தனத்தை சேமித்து சுபவழியில் விரயமின்றி செலவு செய்ய நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற அடிகோளும் தெய்வம் இந்த தட்சிணாமூர்த்தி. சர்ப்ப தோஷம், நாகதோஷம், பித்ரு தோஷம், குரு சாபம், மூதாதையர் சாபம் போன்றவற்றால் வாடும் மக்களுக்கு அரும் மருந்தாவார் இந்தத் திருத்தலம் குடிகொண்டிருக்கும் தட்சிணாமூர்த்தி என்கிறார் கொங்கணர் என்னும் சித்தர்.

வித்தை பெருக, கீர்த்தி மிகுத்து வர, காதலில் ஜெயம் பெற, எண்ணிய மணாளனை அடைந்து இன்பம் பெற, தாய் தந்தையர் நீண்ட ஆயுளுடன் வாழ, மூதாதையர் ஆஸ்தி விருத்தியடைய, வெளிநாடு சென்று பெருந் திரவியம் சேர்க்க, நீண்ட காலம் இளமைப் பொலிவுடன் வாழ ஒவ்வொருவரும் இத்திருத்தலத்தில் குடி கொண்டிருக்கும், மயில் வாகனத்திலமர்ந்தருளாசி தரும் ஸ்ரீவள்ளி-தேவயானை சமேதரான சுப்பிரமணியரை பரிபூர்ண சரணாகதி செய்திட்டால் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். இத்தலம் மயிலாடுதுறை - குத்தாலம் வழியில் அமைந்துள்ளது. கோயில் தொடர்புக்குத் தொலைபேசி எண்: 04364-320520.